6 Jul 2012

கடவுளா? துகளா?

கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று செய்தி வந்ததுதான் தாமதம்

ஒரு சாரார் கடவுளைக் கண்டுபிடித்துவிட்டனர் என்று கூறுகின்றனர். ஒரு சாரார் கடவுள் துகள் பிரபஞ்ச ஊழல் என்கின்றனர்.

"என்னதாண்டா இது" என்று கூகுளில் தேடியதில் கிடைத்த தகவல்களைக் கீழே பெட்டிகளாகத் தந்திருக்கிறேன்.

அதில் பரிதி முத்தரசன் என்பவர் கடவுள் துகள் - பிரபஞ்ச ஊழலைப் பற்றி எழுதியிருக்கிறார்.

ஒரு பெரிய கண்டுபிடிப்பு, அதை உலக சமுதாயத்தின் முன்னகர்வாகக் கருதாமல், இவர் போன்ற முற்போக்குவாதிகளுக்கு ஒரு சாதனை எப்படிப் படுகிறது என்பதைப் பாருங்கள். விஞ்ஞானிகளின் அறிவியல் கண்டுபிடிப்பில் என்ன குறைகண்டுவிட்டார் இவர் என்கிறீர்களா?


இந்தக் கண்டுபிடிப்பு நடந்த இடத்தில் நடராஜர் சிலையை வைத்திருக்கிறார்களாம், அதனால் இது பிரபஞ்ச ஊழலாம். இது பகுத்தறிவா? காழ்ப்புணர்ச்சியா?

திராவிட சிந்தனையும், இடதுசாரி எண்ணங்களும் ஒருவரைத் தன் தேசத்தின்மேலேயே, தான் பெருமைகொள்ள வேண்டிய விஷயத்தையே, ஒரு தீண்டத்தகாத விஷயம்போல் எண்ணத் தூண்டுகிறது  பார்த்தீர்களா? அது அறிவியல் சார்ந்ததாக இருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். இதுதான் அவர்களது பகுத்தறிவு.

இவர் போன்றோர் விமர்சிப்பதற்கு மற்றுமொரு காரணம், "ஹிக்ஸ் போஸான்' துகள் என்று சொல்லியிருந்தால், இவர்கள் விட்டிருப்பார்கள். "கடவுள் துகள்" என்றவுடன் சிலிர்த்தெழுகிறார்கள். கடவுளைத் தீண்டத்தகாவராக நினைத்தால் பரவாயில்லை. கடவுளை நம்புபவர்களைத் தீண்டத்தகாதவர்களாக எண்ணுவதுதான் இவர்களது பகுத்தறிவு. அதுவும் இந்துக் கடவுள்களை நம்புபவர்களாக இருந்தால் அவ்வளவுதான்.

சத்யேந்திரநாத் போஸ், ஐன்ஸ்டினுடன் பணிபுரிந்த ஒரு இந்திய விஞ்ஞானி, நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டிய ஒரு இந்திய விஞ்ஞானி. அந்த "ஹிக்ஸ் போஸானில்" "போஸான்" என்பது இந்த போசின் பெயர்தான். இந்தத் துறையில், அவரது பங்களிப்பைக் கருத்தில் கொண்டு அவரது பெயரை அந்தத் துகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பும், மற்றும் இந்தியாவின் பொருளுதவியும் (காந்தம்) இந்தக் கண்டுபிடிப்பில் பெரும்பங்காற்றியுள்ளது. வெளிநாட்டு விஞ்ஞானிகள் கூட இந்த திட்டத்தின் "வரலாற்று தந்தை போன்றது' இந்தியா என்கின்றனர். இந்தியர்கள் இது குறித்து பெருமைப்பட வேண்டாமா?

எதிலெல்லாம் இந்தியர்கள் பெருமைகொள்ளக்கூடிய செய்தி இருக்கிறதோ, அதிலெல்லாம் இந்த திராவிட சிந்தனையும், இடதுசாரி சிந்தனையும் புகுந்து, பெருமைப்படுபவரை காழ்ப்புணர்ச்சியுடன் வசைமாரிப் பொழியும். வேறு எந்த உருப்படியான விஷயத்தையும் செய்யாது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தினமணிக் கட்டுரை சிறப்பானதாக இருந்தது. இது போன்ற விமர்சனங்கள்தான் ஒரு முன்னகர்வை ஏற்படுத்தும். திரு.முத்தரசன் போன்றோரால் முற்போக்கு என்று சுயமாக வாய்வார்த்தையில் கூறிக் கொண்டு பழம்பெரும் பிற்போக்குவாதிகளாகத்தான் இருக்க முடிகிறது.
 
பிரபஞ்சம் உருவான வரலாறை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், ஆய்வின் முக்கியமான முன்னேற்றமாக "கடவுளின் அணுத்துகள்" என அழைக்கப்படும் "ஹிக்ஸ் போசன்' என்ற பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

பிக்பேங்:"பிக்பேங்' என்ற பிரளய வெடிப்புக்கு பின் இந்த பேரண்டம் உருவானது என்று கூறப்படுகிறது. இந்த வெடிப்பு நிகழ்ந்த பொழுது அணுக்களுக்கு எடை இல்லை. ஆனால் இந்த அணுக்களுக்கு, "ஹிக்ஸ் போசன்' என்ற கட்டத்தை கடந்த பின் தான் நிறை கிடைக்கிறது. முதலில், ஹிக்ஸ் போசனை கண்டுபிடிக்கும் முயற்சியை அமெரிக்கா தொடங்கியது, சரியான பலன் கிடைக்காததால் ஆராய்ச்சி கைவிடப்பட்டது.

ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் சோதனையை தொடங்கியது. இதற்காக செயற்கையாக பெரிய ஆட்ரான் மோதுவி என்னும் ரட்சத ஆய்வுக் கூடத்தில் நியூட்ரான் - புரோட்டான்களை மோதவிட்டனர். வெடித்து சிதறிய செயற்கை பிரளயத்தில் ஹிக்ஸ் போசனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். "ஸ்டாண்ட் மாடல்' என்ற தியரியின் படி, ஹிக்ஸ் போசானுக்கு 125 கிகா எலக்ட்ரான் வோல்ட் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது பேரண்டத்தின் பெரும் பகுதியை அடைத்திருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. இத்துகளால் பதிக்கப்படாதாது போட்டான்கள் மட்டுமே. மற்ற அணுக்கள் இத்துகளால் மட்டுமே நிறையை பெறுகின்றன.

தற்போது இந்த ஆராய்ச்சியில் 125 கிகா எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஹிக்ஸ் போசானாகத்தன் இருக்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இக்கண்டுபிடிப்பு வெறும் ஆரம்ப கட்டம் தான். விஞ்ஞானிகள் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

நன்றி: தினமலர் 6.7.2012


ஜெனீவா: பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற ரகசியத்தை அவிழ்க்கிற விதத்தில், கடவுள் துகளை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது. ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது. அணுக்களால் ஆனது உலகம் என்று.

13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு `பிக்-பேங்க்' எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.

எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி,நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி.,செல்போன்,மேஜை,நாற்காலி என வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன.இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.

இந்நிலையில், அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது.

அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால்,பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இதற்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து,உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.

கடவுள் துகள்

இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன.12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது.

இந்தக் கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது 'கடவுள் துகள்' எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டு விட்டது.

இது தொடர்பான அறிவிப்பை ஜெனீவாவில் திரளான விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா வெளியிட்டார்.அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஹிக்ஸ் பாசன் துகள்தானா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

பிரபஞ்ச ரகசியம் அவிழும்

செர்ன் தலைமை இயக்குனர் ரோல்ப் ஹியூயர் இது பற்றி கூறுகையில்,"ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வுகளுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிரபஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும்"என்றார்.

நன்றி: news.vikatan.com



அணுவுக்கு நிறையை தரக்கூடியவை என்று நம்பக்கூடிய ஹிக்ஸ் போஸோன் எனப்படும் கடவுள் துகள் (நுண் துகள்) உண்மையிலேயே இருக்கின்றன என்பதனை ஜெனிவாவில் உள்ள சேர்ன் ஆய்வு கூட விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

இது வரை மனிதனால் கண்டறியப்படாத பருப்பொருள் (Dark Matter) பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த கூடிய மிக முக்கிய அடிப்படை பரிசோதனையாக இது கருதப்படுவதால் இக்கண்டுபிடிப்பு இயற்பியல் துறையில் புதிய அத்தியாய தொடக்கமாகியுள்ளது. கடவுள் துகள் (God Particle) கண்டுபிடிக்கப்பட்டதை இன்று உத்தியோகபூர்வமாக சேர்ன் விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள்.

சுவிஸ் பிரான்ஸ் எல்லையில் உள்ள சுரங்கத்தில் அணுவின் நுண்துகளை (அணுவின் உட்கூறுகள்) பாரிய வேகத்தில் முடுக்கிவிட்டு அவற்றை மோதச்செய்து இதற்கான முடிவை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்ணுக்கு தெரியாத ஒரு புலத்தில் அணுவுக்கு நிச்சயமாக நிறை (பொருண்மை) இருக்கலாம் என்ற கொள்கையை 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து நம்பப்பட்டு வருகிறது. கணிதத்தில் X எனும் குறியீட்டை பயன்படுத்தி கணக்குகள் போட்டு இறுதியில் அந்த X இன் பெறுமதி என்ன என்பதை கண்டுபிடிப்பது போன்று, கருதுகோள் அளவில் ஹிக்ஸ் போசன் என நுண்துகளொன்றுக்கு பெயரிட்டு, அதுவே அணுவின் நிறைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கருதி விஞ்ஞானிகள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தனர். அப்படி செய்யபப்ட்ட பரிசோதனைகள் வெற்றிபெற்ற போதும், ஹிக்ஸ் போசோன் அணுத்துகள்களை ஆதாரபூர்வமாக நீருபிக்க முடியவில்லை. இவைதான் அந்த ஹிக்ஸ் போசோன் என அவற்றை கையகப்படுத்துவதற்குள் அவை மாயமாகிவருவது இந்த மர்மத்திற்கு காரணமானது.

இந்நிலையிலேயே சுவிற்சர்லாந்தின் சேர்ன் அணு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ல பெரும் ஹாட்ரான் மோதி உதவியுடன், அணுத்துகள்களை மோதவிட்டு அவை பிளவுபடும் போது அங்கு ஹிக்ஸ் போசோன் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

நன்றி: Timecloud.com



ஜெனிவாவிலுள்ள செர்ன் என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், கிக்சு போசானைப் போன்று புதிய துகள் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

50 ஆண்டுகளுக்கு பிறகு, கிக்சு போசானின் கடவுள் துகளைப் போன்ற ஒரு துணை-அணுத் துகளை கடந்த புதன்கிழமை செர்னின் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய செர்னின் தலைமை இயக்குநர் ரோல்வ் கியர் "நாங்கள் இயற்கையை புரிந்துகொள்வதில் ஒரு படிக்கல்லைத் தாண்டியுள்ளோம்" என்றார். மேலும் "இவ்வாறு கண்டறிந்த கிக்சு போசானின் கடவுள் துகள் போன்றதான இத்துகளினால், விரிவாக இதனைப் படிக்கவும், பெரிய அளவில் புள்ளிவிவரங்களை சேகரிக்கவும் வேண்டிய கட்டாயத்தை இது உருவாக்கியுள்ளது" என்று அவர் கூறினார். "இந்த அண்டத்தில் உள்ள புரியாத பல புதிர்களை அறிய இத்தகைய முயற்சி உதவும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடவுள் துகள் பற்றிய காணொளியை செர்ன் நிறுவனம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

"அதன் நிறையானது 100 புரோத்தனை விட அதிகமாக இருக்கும். இது இரு ஒளியன்களாக சிதைவதை நம்மால் பார்க்க முடிவதாய் இருப்பதினால் தான் இதனை கிக்சு போசானின் கடவுள் துகள் போன்றது என கூறுகிறோம். இது முழுமைப்பெற்ற சுழற்சியை கொண்டதாகவுள்ளது. இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இன்னும் இதன் பண்புகளை மேலும் படிக்க வேண்டியுள்ளது" என்று ஊடக தொடர்பாளர் ஜோ இன்கான்டலா கூறினார்.

நன்றி: wikinews.org 4.7.2012



விஞ்ஞானிகள் கண்டுபிடித்த "கடவுள் இல்லாத' துகள் - என். ராமதுரை - First Published : 06 Jul 2012 02:32:06 AM IST
அணுவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அணு என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்களால் ஆனது என்று சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னரே ரூதர்போர்ட் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்துக் கூறினார்.
 அதன் பிறகு விஞ்ஞானிகள் அணுவை மேலும் மேலும் ஆழ்ந்து ஆராயத் தொடங்கினர். இதன் பலனாக துகள் இயற்பியல் என்ற தனித் துறை உருவாகியது. அடிப்படையான துகள்கள் யாவை என்று தொடர்ந்து ஆராய முற்பட்டபோது மொத்தம் 16 துகள்களே அடிப்படையான துகள்கள் என்று கண்டறியப்பட்டது. கல், மண்,பேனா, பென்சில், கார், விமானம், பூமி, சூரியன், நட்சத்திரங்கள், அண்டங்கள் இப்படியாக அனைத்துக்கும் அவற்றின் இயக்கத்துக்கும் இந்த 16 துகள்கள்தான் அடிப்படை.

 இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இயற்பியல் துறையில் இரு வகையான விஞ்ஞானிகள் உண்டு. ஒரு வகை விஞ்ஞானிகள் காகிதம் பென்சில் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி தங்கள் சிந்தனை ஆற்றல் மூலம் இது இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படியான துகள் இருந்தாக வேண்டும் என்று கூறுபவர்கள். இவர்களை கொள்கை விஞ்ஞானிகள் என்று வருணிக்கலாம். இவர்கள் கூறியவை சரிதானா என்று பரிசோதனைகள் மூலம் ஆராயும் விஞ்ஞானிகள் இன்னொரு வகை. ஐன்ஸ்டீன் முதல் வகையைச் சேர்ந்தவர். E=MC2 என்பது முதல் அவர் கூறிய பல கொள்கைகள் சரியே என்று பின்னர் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.

 அடிப்படைத் துகள்கள் 16 என்று சொல்லப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் எடின்பரோ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானியும் அவர் போலவே மேலும் சில விஞ்ஞானிகளும் இன்னொரு முக்கியமான துகள் இருந்தாக வேண்டுமே என்று 1964-ஆம் ஆண்டு வாக்கில் கூறினர். விஞ்ஞானி ஹிக்ஸ் கூறிய துகள் போஸான் என்ற வகையைச் சேர்ந்தது. அதுவரை அறியப்படாத அத் துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என்று பெயர் வைக்கப்பட்டது. அதாவது ஹிக்ஸ் கூறிய வகையைச் சேர்ந்த போஸான் என்பது அதன் பொருள். இந்த போஸானை எங்கே தேடுவது? பொதுவில் போஸான் வகைத் துகள்கள் அல்பாயுசு கொண்டவை. தோன்றிய சில கணங்களில் வேறு வகைத் துகளாகி விடும்.

 ஹிக்ஸ் தாம் குறிப்பிட்ட போஸான் துகள் பற்றி ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லி வைத்தார். அதாவது எல்லா அடிப்படைத் துகள்களும் வெவ்வேறு அளவில் நிறை (Mass) கொண்டவை. நிறை வேறு எடை என்பது வேறு என்றாலும் எளிதில் புரிந்து கொள்ள நிறை என்பதை எடை என்றும் சொல்லலாம். 16 அடிப்படைத் துகள்களுக்கும் நிறை இருப்பதற்கு ஹிக்ஸ் போஸான் தான் காரணம் என்று அவர் சொன்னார். ஆகவே ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பது மிக அவசியமாகியது. தவிர, அணு முதல் அண்டம் வரையிலான அனைத்தையும் விளக்கும் வகையில் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளில் பிரபஞ்ச இயக்கக் கோட்பாடு என்ற ஒட்டுமொத்தக் கொள்கையை உருவாக்கியுள்ளனர். ஆங்கிலத்தில் இதை நற்ஹய்க்ஹழ்க் ஙர்க்ங்ப் என்று கூறுவர். ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிக்காவிட்டால் இக் கொள்கையில் பெரிய ஓட்டை இருப்பதாகி விடும். ஆகவேதான் ஹிக்ஸ் போஸானைத் தேடுவது முக்கிய விஷயமாகியது.

 ஹிக்ஸ் போஸானை எங்கே கண்டுபிடிப்பது? இங்கு ஐன்ஸ்டீன் உதவிக்கு வருகிறார். பொருளை ஆற்றலாக மாற்றலாம். அதேபோல ஆற்றலையும் பொருளாக மாற்றலாம். ஐன்ஸ்டீனின் E=MC2என்ற கொள்கையின் அர்த்தமே அதுதான். ஆகவே பெரும் ஆற்றலைத் தோற்றுவிக்கும் போது நுண்ணிய துகள் வடிவில் பொருள் தோன்றும். உதாரணமாக, புரோட்டான்களைப் பயங்கர வேகத்தில் ஒன்றோடு ஒன்று மோதவிட்டால் பெரும் ஆற்றல் தோன்றும். அப்போது தோன்றும் நுண்ணிய துகள்களை ஆராய்ந்தால் அவற்றில் ஹிக்ஸ் போஸான் தட்டுப்படலாம்.
 துகள்களை இப்படி மோத விடும் ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே செய்து வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் இது ஆட்டுக் கிடா சண்டைபோல சிறிய அளவில் இருந்து பின்னர் டைனோசார்களை மோத விடுவதைப்போன்ற அளவுக்குப் பெரிதாக வளர்ந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த பெர்மிலாப் என்ற துகள் மோதல் ஆராய்ச்சிக் கூடம் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஜெனீவா நகருக்கு அருகே பாதாளத்தில் பிரம்மாண்டமான துகள் மோதல் ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பெர்மிலாப் அண்மையில் மூடப்பட்டது.

 ஜெனீவா அருகே அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிக்கூடம் சுருக்கமாக செர்ன் என்று அழைக்கப்படுகிறது. இங்கு 100 மீட்டர் ஆழத்தில் புரோட்டான்களை மோத விடும் ஆராய்ச்சிக் கூடம் உள்ளது. குதிரைப் பந்தய மைதானம்போல இது வட்ட வடிவில் உள்ளது. இங்கு வலுவான காந்தக் கட்டைகளைப் பயன்படுத்தி புரோட்டான்களை விரட்டோ விரட்டு என்று விரட்டுவார்கள். இரு புறங்களிலும் ஆட்கள் நின்று கொண்டு ஒரு குதிரையை மாறி மாறி சவுக்கால் அடித்தால் அது மேலும் மேலும் வேகமாக ஓடும். புரோட்டான்கள் அதுபோல விரட்டப்படுகின்றன. 27 கிலோ மீட்டர் சுரங்கப் பாதையில் விசேஷ சூழ்நிலைகளில் புரோட்டான்கள் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாய்ந்து செல்லும் வகையில் விரட்டப்படும். அதேசமயத்தில் எதிர்ப்புறத்திலிருந்து இதே வேகத்தில் புரோட்டான்கள் பாய்ந்து வரும். எதிரும் புதிருமாக அதி வேகத்தில் வருகின்ற இந்தப் புரோட்டான்கள் ஒரு கட்டத்தில் ஒன்றோடு ஒன்று மோதும்படி செய்யப்படும். பல கோடி புரோட்டான்கள் இவ்விதம் ஒன்றோடு ஒன்று மோதும். அப்போது கம்பி மத்தாப்பிலிருந்து பொறிகள் வெளிப்படுவதைப் போல ஒளிக் கீற்றுகள் பறக்கும். பயங்கர மோதலின் விளைவாக பெரும் ஆற்றல் வெளிப்படும். ஆற்றல் துகள்களாக மாறலாம் என்ற கொள்கையின்படி பல துகள்கள் நாலா புறங்களிலும் பாயும். இவற்றில் பலவும் அல்பாயுசாக உடனே வேறு துகள்களாக மாறும்.

 இந்த மோதல்களின்போது தோன்றும் விளைவுகளை மிக நுட்பமான கேமராக்கள் படம் எடுக்கும். அப்படங்களை விஞ்ஞானிகள் நுணுக்கமாக ஆராய்வர். ஜெனீவா ஆராய்ச்சிக்கூடத்தில் கடந்த பல மாதங்களாக விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான்கள் தொடர்பாக மிகத் தீவிரமாகப் பரிசோதனைகளை நடத்தி புதன்கிழமையன்று முடிவுகளை அறிவித்தனர். இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் ஆற்றலைத் தோற்றுவித்ததால் இப்போதைய பரிசோதனைகளில் ஹிக்ஸ் போஸான்கள் தட்டுப்பட்டதாகக் கருதப்படுகிறது.

 ஹிக்ஸ் போஸான்கள் என்று சொல்லத்தக்க துகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் குழுவினர் மிக ஜாக்கிரதையாக அறிவிப்பு வெளியிட்டனர். பரிசோதனைகளில் ஹிக்ஸ் போஸான் சில கணங்களில் வேறு துகளாக மாறினாலும் ஹிக்ஸ் போஸான் எவ்விதமான துகள்களாக மாறும் என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். உருமாறிய போஸான்கள் அவ்விதத் தன்மைகளைக் காட்டியதால் அவர்கள் கண்டுபிடித்தது ஹிக்ஸ் போஸான்களே என்று கருதப்படுகிறது. இக்கண்டுபிடிப்பு மிக மகத்தானது என்றே சொல்ல வேண்டும்.

 ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு பற்றிய செய்தி வெளியான உடனேயே மேற்கத்திய பத்திரிகைகளும் டிவி சேனல்களும் "கடவுள் துகள்' கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இதில் கடவுள் எங்கே வந்தார்?

 ஹிக்ஸ் போஸான் பற்றி ஒரு சமயம் பிரபல விஞ்ஞானி ஒரு நூலை வெளியிட்டார். இத்துகள் விஞ்ஞானிகளை அலைக்கழிப்பதை அவர் மனதில் கொண்டு எரிச்சலுடன் தமது நூலுக்கு Goddamn particle என்று தலைப்பிட்டார். நாசமாய்ப் போன துகள் என்பது இதன் பொருள். வசவு வார்த்தை ஒரு நூலின் தலைப்பாக இருக்கக்கூடாது என்று கருதிய நூல் பதிப்பாளர் அதை God Particle என்று மாற்றினார். தவிர இத் தலைப்பு மக்களைக் கவருவதாக இருக்கும் என்றும் அவர் நினைத்தார். அவர் நினைத்தது சரியாகியது. அப்போதிலிருந்து ஹிக்ஸ் போஸான் துகளைப் பலரும் கடவுள் துகள் என்றே குறிப்பிட ஆரம்பித்தனர். மற்றபடி ஹிக்ஸ் போஸான் துகளுக்கும் கடவுளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

ஹிக்ஸ் போஸானை "கடவுள் துகள்' என்று வருணிப்பது அபத்தம் என்று தெரிந்தும் பெரும்பாலான மேலை நாட்டு ஊடகங்கள் (இந்தியாவிலும்தான்) கவர்ச்சியான தலைப்புக்காக அச்சொல்லையே பயன்படுத்தின. இதைவிட ஒருபடி மேலே போய், "விஞ்ஞானிகள் கடவுளைக் கண்டனர்' என்று வருணித்த ஊடகங்களும் உண்டு. ஹிக்ஸ் போஸான்களில் மட்டும் கடவுள் இருப்பதுபோல எண்ணச் செய்வது அசட்டுத்தனமானது. கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்று சொல்வதானால் ஹிக்ஸ் போஸான் என்ன அனைத்துத் துகள்களிலும் கடவுள் இருப்பதாக ஒப்புக் கொள்ள வேண்டும். ஹிக்ஸ் போஸானை மட்டும் கடவுள் துகள் என்று வருணிக்க முற்படலாகாது.

 விஞ்ஞானிகளைப் பொருத்தமட்டில் அவர்கள் ஒருபோதும் ஹிக்ஸ் போஸானை கடவுள் துகள் என்று குறிப்பிட்டதில்லை. விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி விஷயங்களில் கடவுளை இழுப்பதே கிடையாது. ஹிக்ஸ் போஸானுக்கும் இந்தியாவுக்கும் சில தொடர்புகள் உண்டு.

 அடிப்படைத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வந்த சமயத்தில் குறிப்பிட்ட வகைத் துகள்களுக்கு என்ன பெயர் வைப்பது என்ற பிரச்னை எழுந்தது. இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸின் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது.

 போஸ் என்பதை போஸான் என்று மாற்றி அவ்வகைத் துகள்களை போஸான்கள் என்று அழைக்கலாயினர். சத்யேந்திர நாத் போஸýம் ஐன்ஸ்டைனும் சம காலத்தவர். இருவரும் சேர்ந்து எழுதிய கட்டுரைகள் இயற்பியல் உலகில் முக்கியமானவை. சத்யேந்திர நாத் போஸýக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் புறக்கணிக்கப்பட்டார்.

 ஐரோப்பிய செர்ன் ஆராய்ச்சிக்கூடத்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உண்டு. இந்த ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தேவையான ராட்சத காந்தங்களையும் மற்றும் பல கருவிகளையும் இந்தியா தயாரித்தளித்தது. அங்கு சுமார் 100 இந்திய விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர்.

 ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடித்ததுடன் இயற்பியலில் ஆராய்ச்சிகள் முடிவடைந்து விடவில்லை. மேலும் ஆராய்ச்சிகளை நடத்தி ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

 தவிர, பிரபஞ்சத்தில் கருப்புப் பொருள், கருப்பு ஆற்றல் என இன்னும் பிடிபடாத விஷயங்கள் உள்ளன. இவை பற்றி நிறைய ஆராய வேண்டியுள்ளது. தவிர, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி விஷயத்தில் எப்போதுமே இத்துடன் எல்லாம் முடிவடைந்து விட்டது என்று திருப்திப்படுவது கிடையாது. 

நன்றி: தினமணி 6.7.2012



கடவுள் துகள் கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானியின் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகிறதா?

 

ஹிக்ஸ் பாசன் எனப்படும் கடவுள் துகளுக்கான இணை அணுத்துகள்கள் கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானியின் பங்களிப்பும் அளப்பரியதாக உள்ளதாக சுவிற்சர்லாந்தின் சேர்ன் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் இத்தகவல் பல இடங்களில் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதாகவும், இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு எப்படிப்பட்டது என சுட்டிக்காட்ட தவறவிடப்படுவதாகவும் அதிருப்தி எழுந்துள்ளது.

இங்கிலாந்தின் பிரபல விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸின் முதற்சொல்லும் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸின் இறுதிச்சொல்லும் இணைந்து ஹிக்ஸ் போசன் (கடவுள் துகள்) எனும் பெயர் உருவாக்கப்பட்டது. 'கடவுள் துகள் உண்மையில் இருக்கலாம். அணுவுக்கு நிறையை தருவது அணுவின் உட்கூறுகளில் ஒன்றான போசோன்கள் தான் என 1960 களில் உலகுக்கு உறுதியாக நம்பிக்கை வெளியிட்ட முதல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் ஆவார். அணுவில் அவற்றை இணங்கண்டவர் இந்திய அறிவியலாளர் சத்தியயேந்திரநாத் போஸ் என்பதால் அவற்றிற்கு 'போசன்கள்' என பெயரிடப்பட்டன.

மேலும் இணை அணுவியல் துகள்களின் அடிப்படை வகுப்புக்களை வகுத்தவர்களில் பிரதானமானவர் போஸ் ஆவார். இவர் ஐன்ஸ்டைனுடன் இணைந்து பணிபுரிந்தவர். ஜேர்மன் மொழியில் இருந்த ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வு கட்டுரையை புரிந்து கொள்வதற்காக ஜேர்மனிய மொழியையே கற்றவர். குவாண்டம் பொறிமுறையில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காக இவர் அறியப்படுகிறார். ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் தத்துவம் ஆய்வுக்கட்டுரையை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் எனும் புகழ் இவருக்கு உண்டு.

நேற்றைய ஊடகவியலாளர்கள் கருத்தரங்கிலும் சேர்ன் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கையில், கடவுள் துகள் ஆராய்ச்சி திட்டத்தில் வரலாற்று தந்தை போன்றது இந்தியா என பெருமிதத்துடன் கூறியிருந்ததற்கு முக்கிய காரணம் குறித்த இந்திய அறிவியல் விஞ்ஞானியான சத்தியேந்திரநாத் போஸ் ஆவார்.

எனினும் கடவுள் துகள் பற்றிய இறுதியான கண்டுபிடிப்புக்களை இன்று உலகமே கொண்டாடும் வேளையில் சத்தியேந்திரநாத் போஸ் இக்கண்டுபிடிப்பில் செலுத்திய பங்களிப்புக்களை பற்றி ஊடகங்களில் தகவல் இல்லை. அவரை பற்றி பலர் அறிந்திருக்க தவறுகின்றனர் என அதிருப்து எழுந்துள்ளது.

இந்திய விஞ்ஞானியின் பெயர் திட்டமிடப்பட்டு விடுபடுவதாக இந்திய செல்லூலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனரும், இயக்குனருமான பி.எம்.பர்காவா தெரிவித்துள்ளார். இது முதல் தடவை அல்ல இது போல் பல அரிய கண்டுபிடிப்புக்களில் இந்தியாவின் பங்களிப்பு விடுபடுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் போஸ் வரலாற்று ரீதியாகவே புறக்கணிக்கப்படுகிறார் என பிரதமருக்கான அறிவியல் ஆலோசனை கவுன்சிலின் தலைவர் சி.என்.ஆர் ராவ் தெரிவித்துள்ளார். போஸின் கபடமற்ற வெளிப்படையான பேச்சு இதற்கொரு காரணமாக இருக்கலாம். ஒரு முறை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜகவர்லால் நேரு நிகழ்வொன்றில் நடத்திய பேச்சின் போது, நேருவின் கருத்தை வெளிப்படையாகவே போஸ் எதிர்த்திருந்தார். ஒருவேளை போஸ் அமெரிக்காவில் இருந்திருந்தால் மிக பிரபலமடைந்திருப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி: Tamilmedia.com
கடவுள் துகள் கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானியின் பங்களிப்பு
Geneva வியாழக்கிழமை, ஜூலை 05, 9:15 AM IST
ஜெனீவா, ஜூலை 5-

ஹிக்ஸ் பாசன் என்று அழைக்கப்படுகிற கடவுள் துகளை கண்டுபிடித்து உள்ளதாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நேற்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு, உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வந்த செர்ன் என்று அழைக்கப்படுகிற அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையத்தில் இந்தியா அளித்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நடராஜர் பிரபஞ்ச கடவுளாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், கடவுள் துகள் ஹிக்ஸ் பாசன் என்று அழைக்கப்படுவதின் பின்னணியில் இந்திய விஞ்ஞானியும் உள்ளார்.
ஹிக்ஸ் என்பது இங்கிலாந்து விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பதின் பின்பாதி. பாசன் என்பது இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் என்பதில் உள்ள போஸ் என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆமாம், கடவுள் அணுத்துகளை கண்டறிவதற்கு நமது இந்திய விஞ்ஞானியின் ஆராய்ச்சியும் அடிப்படையாக அமைந்து இருக்கிறது.

இதுபற்றி செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தின், செய்திதொடர்பாளர் நேற்று குறிப்பிடுகையில்:

இந்த திட்டத்தின் வரலாற்று தந்தை போன்றது இந்தியா என பெருமிதத்துடன் கூறினார்.
நன்றி: மாலை மலர் 5.7.2012


கடவுளைக் கண்டுபிடித்த பீட்டர் ஹிக்ஸ்சும் தோற்றுப் போன ஸ்டீபன் ஹாக்கிங்சும்
கடவுளின் அணுத் துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் குறித்து முதல் முறையாக தெரிவித்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ், தான் சொன்னதை சாதித்துக் காட்டியுள்ளார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும். அதேசமயம், அவரால் அதைக் கண்டுபிடிக்க முடியாது என்று நான் சவால் விட்டு 100 டாலர் பெட் கட்டியிருந்தேன். தற்போது பெட்டில் நான் தோற்று விட்டேன் என்று கூறியுள்ளார் பிரபல இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்.
உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங். பேச முடியாமல், முற்றிலும் முடங்கிய நிலையில் சக்கர நாற்காலியில்தான் பல வருடங்களாக இவர் காலத்தை தள்ளி வருகிறார். ஆனால் தற்போது 70 வயதாகும் இவரது திறமைகள் அபாரமானவை. தி ப்ரீப் ஹிஸ்டரி ஆப் டைம் என்ற இவரது நூல் மிகப் பிரபலமானது. பிளாக் ஹோல் குறித்து அதில் அவர் அவ்வளவு அழகாக, எளிமையாக விளக்கியிருப்பார்.
தற்போது கடவுள் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு குறித்து ஹாக்கிங் கருத்து தெரிவித்துள்ளார். ஹிக்ஸ் போஸான் குறித்து முதன் முதலில் தெரிவித்தவரான பீட்டர் ஹிக்ஸை இவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ஹாக்கிங் வெளியிட்டுள்ள கருத்தில், பீட்டர் ஹிக்ஸ் நோபல் பரிசுக்கு முழுமையாக தகுதியானவர்.
இவரது கடவுளின் அணுத்துகள் கண்டுபிடிப்பு மிகப் பெரிய விஷயம். மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்டன் கார்னேவிடம், பீட்டர் ஹிக்ஸால், ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்க முடியாது என்று நான் சவால் விட்டிருந்தேன். 100 டாலர் பெட்டும் கட்டியிருந்தேன். ஆனால் அது தவறு என்பதை ஹிக்ஸ் நிரூபித்து விட்டார். இப்போது எனக்கு 100 டாலர் நஷ்டமாகி விட்டது என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.
கண்ணுக்குத் தெரியாத ஒரு அணுத்துகள்தான் இந்த பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கிறது என்பதை முதல் முதலில் சொன்னவர் பீட்டர் ஹிக்ஸ்தான். அந்தத் துகள்தான் ஹிக்ஸ் போஸான் எனப்படும் கடவுளின் அணுத்துகள். இவர் இதை முதலில் சொன்னபோது இது வெறும் கட்டுக்கதை, இல்லாததைச் சொல்கிறார் என்று விஞ்ஞானிகள் பலரும் கேலி செய்தனர். இதுகுறித்து அவர் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரையை ஒரு அறிவியல் சஞ்சிகை நிராகரிக்கக் கூட செய்தது. இயற்பியலின் அடிப்படையைத் தகர்க்க முயல்கிறார் பீட்டர் ஹிக்ஸ் என்று பல விஞ்ஞானிகள் குற்றம் சாட்டக் கூட செய்தனர்.
அப்போது 34 வயதான பீட்டர் ஹிக்ஸ், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியலாளராக இருந்தார். தனது வாதத்தை அவர் கைவிடவில்லை. அவரது கூற்று சரியே என்று தொடர்ந்து கூறி வந்தார். இருப்பினும் அவரால் அதை நிரூபிக்க முடியாமலேயே இருந்தது. தற்போதுதான் ஹிக்ஸ் போஸான் இருப்பது உண்மை என்று தெரிய வந்து பீட்டர் ஹிக்ஸ் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
கடந்த 48 வருடங்களாக வெறும் கற்பனைக் கதாபாத்திரமாகவே இருந்து வந்த கடவுளின் அணுத்துகள் உண்மைதான் என்பதை ஜெனீவா அருகே ஐரோப்பிய நாடுகள் இணைந்து அமைத்த அணு ஆராய்ச்சிக் கழகம் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அன்று புலவர்கள் சண்டையில் மொழி செழித்தது, வளர்ந்தது. இன்று விஞ்ஞானிகளின் சண்டையில் நமதுஅடிப்படைதெரிய வந்துள்ளது. எல்லாம் நன்மைக்கே..

நன்றி : http://rste.org 5.7.2012