8 Jan 2013

கொஞ்சி கொஞ்சிப் பேசி மதிமயக்கி



டில்லி பாலியல் வன்கொடுமை நிகழ்ச்சிக்குப் பிறகு பலதளங்களில் விவாதப்பொருளாகிவிட்டது பெண் பாதுகாப்பு, ஆண்-பெண் சமத்துவம் ஆகியன. மீடியாவும் யார் வாயையாவது பிடுங்கி, இவர் ஆணின் துணையில்லாமல் பெண் செல்வது தவறு என்று கூறுகிறார் என்று கதறுகிறது. உடனே ஒரு பெரிய போராட்டம், கொடும்பாவி எரிப்பு என்று பற்றி எரிகிறது ஊர்.

குற்றத்திற்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த பெண் பாதுகாப்பு குறித்த விவாதங்களில் ஈடுபடும் போது, பெண்ணை எப்படிப் பாதுகாப்பது என்பதும் விவாதப் பொருளாகிறது. பெண்ணை எப்படிப் பாதுகாப்பது? நவநாகரிக ஆடை என்ற பெயரில் பெருமளவு உடலைக் காண்பித்து நடக்கும் பெண்ணை எப்படிப் பாதுகாப்பது? நாங்கள் எப்படியும் அணிவோம், அது எங்கள் பிறப்புரிமை. நீங்கள் ஆணாதிக்கப் பார்வையில் பார்க்கிறீர்கள் என்றால் என்ன சொல்வது.


இரவு 9 மணிக்கு மேல், ஆண்களே ஒரு மோதிரமோ அல்லது ஆரமோ அணிந்து கொண்டு வெளியில் செல்ல முடியாத நிலைதான் இன்னும் பெருநகரங்களில்கூட இருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய் மோதிரத்திற்காக, விரலையே வெட்டி எடுத்துச் செல்லக் காத்திருக்கும் திருட்டுக்கும்பல் நாடு எங்கும் பரவியிருக்கிறது. ஆணுக்கு என்னவோ பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வைத்திருப்பது போலவும், பெண்ணுக்கு அந்தப் பாதுகாப்பு இல்லை என்பது போலவும் பேசுவது எந்த விதத்தில் நியாயம். இதில் வேறு, நான் புதுமைப் பெண், இப்படித்தான் உடையணிந்து கொண்டு செல்வேன் என்றால் யார் பாதுகாப்பு கொடுப்பது?

நான் சாலைவழி நடக்கும்போதெல்லாம் காணும் காட்சி,  இயர்போனைக் காதில் மாட்டிக் கொண்டு கொஞ்சிக் கொஞ்சி பேசிச் செல்லும் பெண்களும், அதைப் பார்த்து வயிறெரிந்து சிலரும், ரசித்துக் கொண்டு சிலரும் என பொதுமக்கள் செல்லும் காட்சி. அதில் வயிறெரிந்து செல்லும் வகை உண்மையில் சமுதாயம் சீரழிந்து போகிறதே என்று வருந்தும் வகையினர். ரசிக்கும் கூட்டம்... ?

      இது ஆபத்தான கூட்டம். இதில் பல வகை உள்ளன. ஒரு சிலர், பரவாயில்லை வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்று ரசித்து விட்டுச் செல்கின்றனர். ஒரு சிலர் அந்தப் பெண் கொஞ்சும் அழகை ரசித்துச் செல்கின்றனர். ஒரு சிலருக்கு படுக்கையறைக் காட்சியை நேரடியாகப் பார்ப்பது போல் ரசித்துப் பார்க்கின்றனர். இதுவே பேராபத்தான வகை, இந்த வகையிலும் பல வகை உள்ளன. இதிலும், ஆபத்தற்ற ரசிகர் கூட்டம் உள்ளது. இருந்தாலும், அந்தக் கூட்டம் கூட ஒரு கட்டத்தில், வாய்ப்பு கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும் வகைதான். இங்கே, ஆபத்தை வா... வா... என்று அழைப்பது யார்?

      சரி இப்படிப்பட்ட பெண்கள் அப்படி என்னதான் உலக அரசியலைப் பேசிவிடப்போகிறார்கள் என்று பார்த்தால், பல பெண்கள் பேசுவது அருகில் உட்கார்ந்திருக்கும் ஒருவருக்கே கேட்காது. அப்படியே, கேட்டு விட்டாலும், "அப்புறம், அப்புறம்" என்று தான் கேட்கும். இந்த அப்புறத்தால்தானே, அப்புறத்தில் மாட்டிக் கொள்ளும்போது சீரழிகிறார்கள்.

      பேருந்திலோ, ரெயிலிலோ அருகருகே உட்கார்ந்திருக்கும் காதலர்களைப் பாருங்கள். யார் அவர்களைப் பார்த்தாலென்ன என்ற தைரியத்துடன், சுற்றியிருக்கும் உலகையே மறந்துவிட்டு அந்தப் பொதுவாகனத்தையே படுக்கையறையாக்கி விடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து திட்டுபவன், பிற்போக்காளனாகவும், வயிற்றெரிச்சல் பிடித்தவனாகவும் பலருக்குத் தெரிகிறான். அப்படி அவன் திட்டும் போது, வலிய வந்து வக்காலத்து வாங்கி பகுத்தறிவு பேசுகிறானே, அவன் அனைவருக்கும் நல்லவனாகத் தெரிகிறான். அவன் ஏன் வக்காலத்து வாங்குகிறான்? ஒருவர் திட்டுவதால் அவனுக்குக் கிடைக்கும் இலவசக் காட்சி ரத்தாகிறதல்லவா?

இந்த இலவசக் காட்சியைக் கண்டு ரசிப்பவர்களில் ஒருவன்தான் காமக்கொடூரனாக மாறி இப்படிப்பட்ட ஒரு கொலைகாரனாக மாறுகிறான்.

வெட்டியாக பகுத்தறிவு பேசிக்கொண்டு, ஆணும் பெண்ணும் சமம் என்று வாதிட்டு, நவநாகரிக ஆடை என்ற பெயரில் அறைகுறை ஆடை அணிந்து கொள்வதற்கும், பொது அரங்கில் காதல் செய்வதற்கும் வக்காலத்து வாங்குவதால் பெண்களின் பாதுகாப்பு பலப்படும் என்று எப்படி ஏற்க முடியும்?

என்னதான் அறிவால் ஆணுக்குப் பெண் சமமாக இருந்தாலும், சில இடங்களில் ஆணின் பாதுகாப்பு அவளுக்குத் தேவைப் படுகிறது. அதிகமாக நகை அணிந்து செல்லும் போதோ, ஆள் அறவமற்ற பகுதிகளுக்குச் செல்லும் போதோ, ஒரு பொறுப்புள்ள (!) ஆணின் துணை கொண்டு செல்லுதலே பெண்களுக்குப் பாதுகாப்பானது. ஒவ்வொரு பெண்ணுக்கும் அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றால், அது நடைமுறைச் சாத்தியமல்ல.

பாதிக்கப்பட்ட பெண் ஆணின் துணையோடு சென்றுதானே அந்த நிலையை அடைந்தாள் என்று சீறுவோர்கள் அடைப்புக்குறிக்குள் ஆச்சரியக்குரி இட்டிருக்கும் வார்த்தையை அழுத்தமாக படியுங்கள்.

சரி ஆண்களுக்கு இதில் பொறுப்பேயில்லையா என்றால் உண்டு. பெண்கள் கவர்ச்சியாக உடை அணிந்து வருகையில் அதைப் பார்த்து நாம் ரசிக்காவிட்டால், நாம் ரசிப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியாவிட்டால், அது அந்தப் பெண்ணுக்கும் நாம் கொடுக்கும் மரியாதை அல்ல என்று நினைக்கும் ஆண்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஆண்கள், 'அப்படிப் பார்ப்பது ஒழுக்கங்கெட்ட செயல். பெண்கள் அவர்களை நாகரிகமானவர்களாக காட்டவே அப்படி உடை அணிகிறார்கள். ஆண்களுக்குக் காட்டி மயக்க அல்ல' என்பதை உணர்ந்து பெண்களைத் தவறாகப் பார்க்காமல் இருந்தால் இப்படிப்பட்ட குற்றம் நடக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இப்படி ஒவ்வொரு ஆணும் நினைக்க வேண்டும். இது சாத்தியமா?