21 Jan 2013

புத்தனாக இருக்கலாம்! அநியாயத்துக்கு புத்தனாக?



மரண தண்டனை கூடாது. அது மனிதாபிமானமற்ற செயல். கொலைக் குற்றங்களுக்கும் தனிமைச் சிறை ஆயுள் முழுவதும் வழங்கலாம். மேற்கண்ட கருத்து, பொது அரங்கில் மீண்டும் இப்போது உலா வருகிறது. 

2005ம் ஆண்டு, தன்னாட்டில் வாழ வழியில்லாத காரணத்தால், வீட்டு வேலை செய்வதற்காக  இலங்கையைச் சேர்ந்த ரிசானாநபீக் என்ற இளம் பெண், சவுதிக்குச் சென்றாள். அவள் பணி செய்த அந்த வீட்டிலே சமையல் செய்வது, வீட்டு வேலைகளை செய்து, வீட்டு முதலாளியின் நான்கு மாதக் குழந்தையைப் பராமரிப்பது ஆகிய பணிகளை முறையாக நிறைவேற்றி வந்தாள். ஆனால் அந்த நான்கு மாதக் குழந்தையை இளம்பெண் ரிசானாநபீக் கொலை செய்தார்
என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதாகக் கூறி    சவுதி நாட்டு நீதிமன்றம் ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்து 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

"அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டிய ஒரு தேவையும் எனக்குக் கிடையாது, நான் பாலூட்டும்போது குழந்தை மூச்சுத் திணறி அதன் காரணமாக இறந்ததே தவிர, நான் பராமரித்துப் பாதுகாத்து வந்த அந்த நான்கு மாதச் சிசுவை கொல்ல வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது" என்று ரிசானாநபீக் கதறியதை அந்நாட்டு அரசாங்கம் செவிமடுக்கவில்லை.

சவுதி ஷரியத் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர் மன்னித்து, ஒப்புகை எழுதிக் கொடுத்தால், குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்க வழியுண்டு. ஆனால் இறந்து போன அந்த நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர், அந்த இளம் பெண்ணை மன்னிக்கத் தயாராக இல்லை.

கடந்த ஜனவரி 9ஆம் தேதி சவுதி அரசாங்கம்  ஒரு மைதானத்தில் ரிசானாநபீக்-ஐ, கை விலங்கிட்டு அழைத்து வந்து, பொதுமக்கள் முன்னிலையில் மண்டியிடவைத்து, அவள் தலையை நீண்ட அரிவாள் கொண்டு சீவி மரண தண்டனையை நிறைவேற்றினர்.

இதற்கு மரண தண்டனையா? என்று கேட்டால் பரவாயில்லை. மரண தண்டனையே கூடாது என்று கேட்டால்? அஜ்மல் போன்றையும், சீரியல் கில்லர்களையும், கொலை செய்கிறோம் என்று அறிந்தே திட்டமிட்டு கொலை செய்பவர்களையும் தனிமைச் சிறையில் ஆயுள் முழுதும் அடைத்து வைத்தால் எத்தனை கதவுகளை திறந்து விடுகிறோம் நாம்?

அக்குற்றவாளி தப்பித்து வர வழியிருக்கிறது. அஜ்மல் போன்றோர் தனிமைச் சிறையில் இருந்தால் தீவிரவாத அமைப்புகள் அப்பாவி மக்களைக் கடத்தி வைத்துக் கொண்டு பிணைத்தொகையும் அஜ்மலின் விடுதலையையும் கேட்க வழி இருக்கிறது. கொலை செய்ய அஞ்சுபவன் கூட, 'கொலை செய்தால் மரணதண்டனையா கிடைக்கப் போகிறது. மூன்று வேளை தடையற்ற உணவுடன், கூடவே தக்க பாதுகாப்புடன் ஆயுள் முழுவதும் சிறையில் இருந்துவிடலாம்' என்று ஊக்கம் கொள்ளவும் இது வழி வகுக்கும்.

மிகவும் சிரமப்பட்டு தீவிரவாதிகளைப் பிடிக்கும் காவல்துறையிலோ அல்லது ராணுவத்திலோ வேலை செய்பவர்களுக்கு இவனைப் பிடித்துக் கொடுத்தால் தனிமைச் சிறைதானே, சாகவா போகிறான். நாமே இவனைப் போட்டுத் தள்ளிவிடலாம்' என்ற உணர்வு ஏற்பட்டு, சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். பொதுமக்களுக்கும் அந்த உணர்வே ஏற்படும். "கற்பழிப்பவனை போலீசில் பிடித்துக் கொடுத்தால் பாதுகாப்பல்லவா கொடுப்பார்களாம், இங்கேயே அவனைப் பிடித்து வைத்து வெட்டினால், கலவரம் என்று காட்டினால்..." என்று மக்களும் சட்டத்தை மதிக்காமல், தாங்களே சட்டத்தை மீறும் நிலை ஏற்படும். "விருமாண்டி"யில் மரண தண்டனை கூடாதென்று வாதிட்டு, "உன்னைப் போல் ஒருவனி"ல் தானாகவே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கொலை செய்யும் பகுத்தறிவுக்காரராகிவிடுவோம். பகுத்தறிவு என்பது அது அல்ல? மனிதர் என்ற போர்வையில் மிருகமாக உலாவரும்  இவர்களுக்கெல்லாம் மக்கள் வரிப்பணத்தை விரயமாக்க வேண்டுமா? அஜ்மலின் பாதுகாப்பிற்கும் அவனது வசதிகளுக்கும் செலவு செய்த கோடிக்கணக்கான பணத்தை, ஏழைக்குழந்தைகளின் கல்வி செலவிற்குப் பயன்படுத்தியிருக்கலாமே!

சுதந்திர இந்தியாவில் எத்தனை மரண தண்டனைகளைத்தான்  நாம் நிறைவேற்றி விட்டோம்? அப்படி நிறைவேற்றப்பட்டது அத்தனையும் தக்க ஆதாரத்துடன் மனிதாபிமானமே அற்று மிருகங்களாகத் திரிந்தவர்களுக்குத் தானே வழங்கப்பட்டிருக்கிறது. எங்கோ அரேபியாவில் நடந்த ஒரு காரியத்திற்காக இந்தியாவில் நியாயம் கேட்பது, மரணதண்டனை கூடாது என்று வாதிடுவது என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவே படுகிறது.

புத்தனாக இருக்கலாம்! அநியாயத்துக்கு புத்தனாக இருக்கக் கூடாது...

அரேபியச் செய்தியும் மரண தண்டனைக்கெதிரான அறைகூவலும் தினகரன் 21.1.2013 இதழில் பார்த்தது.